“நவாஸ் கனி எம்.பி-யின் பதவியை பறிக்க வேண்டும்” - பிரதமருக்கு கடிதம் எழுதிய வழக்கறிஞர்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும் ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியுமான நவாஸ் கனி கடந்த 21ம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவிற்கு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த சிலருடன் வருகை தந்தார். அப்போது அவருடன் வந்த இஸ்லாமியர்கள் சிலர் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் அமர்ந்து அசைவ உணவை உட்கொண்டனர். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்திலும் வெளியிட்டிருந்தார்.
இந்தப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் குடியரசுத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். நாடாளுமன்றத்தில் எம்.பி ஆக பதவி ஏற்கும் போது அவர் ஏற்ற பதவிப்பிரமாணத்தின் படி, மதவிரோதங்களை தூண்டும் வகையிலும், மத வெறியுடனும் செயல்படமாட்டேன் அனைத்து மதங்களையும் மதித்து இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டினை நிலைநிறுத்துவேன் என எடுத்த உறுதிமொழியை முற்றிலும் மீறியுள்ளார்.
அவர் சார்ந்த மதத்திற்கு ஆதரவாகவும், இந்து மதத்திற்கு எதிராகவும், வெறுப்புணர்வுடன் செயல்பட்டு சர்ச்சைக்குரிய இடத்திற்கு தொகுதி விட்டு தொகுதி சென்று மதக்கலவரத்தை தூண்டி வருகிறார். தனது எம்பி பதவியை துஷ்பிரயோம் செய்து வரும் நவாஸ்கனி மீது உரிய நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றத்தில் அவர் பதவியினை பறிக்கும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்”
இவ்வாறு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.