வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிஎம்எஸ்-03 : இஸ்ரோ தலைவர் நாராயணன்..!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் 4,400 கிலோ கிலோ எடை கொண்டதால், புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடையுடையதாக சிஎம்எஸ்-03 உள்ளது
இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் நாராயணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. சிஎம்எஸ்-03 அதிக எடையுடைய செயற்கைக்கோள். இன்று அனைத்தும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடைபெற்றது. எல்விஎம் 3 ராக்கெட் மூலம் 100% வெற்றி கிடைத்துள்ளது.
இந்த வெற்றி இஸ்ரோவில் திறன் வாய்ந்த விஞ்ஞானிகளால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் குழுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும் காலம் மிகவும் சவாலானதாக இருந்தது. வானிலை நமக்கு எதிரானதாகவே இருந்தது. இருந்தபோதும் இந்த வெற்றி இஸ்ரோவில் உள்ள ஒவ்வொருவரின் தீவிர முயற்சியால் சாத்தியமாகியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.