For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு" - செல்வப்பெருந்தகை பேட்டி

மக்களை நீங்கள் பதற்றத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
02:25 PM Jun 07, 2025 IST | Web Editor
மக்களை நீங்கள் பதற்றத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 மக்களை பதற்றத்தோடு வைக்கவே முருகன் மாநாடு     செல்வப்பெருந்தகை பேட்டி
Advertisement

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று (ஜுன் 7) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

Advertisement

"பாஜக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலம் போல நடத்துவதில்லை. மக்களை நீங்கள் பதற்றத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த முருகன் மாநாடு போன்றவை நடத்தப்படுகிறது. ஏற்கனவே நம்முடைய இந்து அறநிலையத் துறை சார்பாக
முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இவர்கள் நடத்த வேண்டிய தேவை இப்போது என்ன இருக்கிறது? வேண்டுமென்றால் இவர்களுடைய மாநாட்டை குஜராத் உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தலாமே?

அதுதான் சமத்துவம்.. அதுதான் கடவுளை சமமாக பார்க்கிறோம்
என்ற செய்தியாக இருக்கும். ஆனால் அரசியல் செய்து மக்களை அச்சத்தில் வைத்து இருக்கிறார்கள். இது வட மாநிலங்களில் எப்படி கலவரத்தை தூண்டினார்களோ? அதே போன்று தென் மாநிலங்களிலும் தூண்ட நினைக்கிறார்கள்" என்றார்.

மறு சீரமைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாடு முலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதலமைச்சர்களை அழைத்து மறு சீரமைப்பு குறித்து என்ன ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். தென்மாநிலங்களை புறக்கணிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக இறங்கி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எவ்வளவு இருக்கைகள் இருக்கின்றன. ஆயிரம் இருக்கைகள் போட வேண்டிய தேவை என்ன இருக்கிறது. ஆயிரம் இருக்கைகள் போட்டு இருக்கிறார்கள் என்றால் அதன் உள்நோக்கம் என்ன?

இதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரியவில்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தெரியவில்லை. வராததை வருகிறது என பூச்சாண்டி காட்டுவதாக எடப்பாடி செல்கிறாரே. ஆயிரம் இருக்கைகள் எதற்காக
போட்டு இருக்கிறார்கள்? காரணம் என்ன?. ஆயிரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகவா? 545-க்கு பதில் ஆயிரம் என்றால், தமிழ்நாட்டினுடைய பிரதிநிதித்துவம் எங்கு இருக்கும். இப்பொழுது
நாடாளுமன்றத்தில் 10 நிமிடங்களுக்கு மேல் பேச முடியவில்லை. ஆயிரம் வந்து
விட்டால் இரண்டு நிமிடம் கூட தமிழ்நாடு சார்பாக பேச நேரம் கிடைக்காது.

இதுகுறித்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லையா? இல்லை புரிந்துக்கொண்டு இப்படி பேசுகிறாரா? என தெரியவில்லை. பாஜகவின் திட்டமே மக்களை திசை திருப்புவது தான். நாங்கள் தெளிவாக சொல்கிறோம் மறு சீரமைப்பு என்பது, பாஜக திட்டமிட்டது போல் நடந்தால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். தென்னிந்தியா பாதிக்கப்படும். வடமாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்தே தீர்மானித்து விடுவார்கள்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், "நாங்கள் உடனே நடத்துங்கள் என்று கூறுகிறோம். நாங்கள் எதையும் திசை திருப்பவில்லை. எதற்கு ஓராண்டு, இரண்டாண்டு தள்ளி போடுகிறீர்கள். மத்திய அரசிடம் தான் புள்ளியியல் துறை இருக்கிறது. மாநில அரசு சென்சஸ் நடத்தலாம், சர்வே நடத்த
முடியாது. இதை நிச்சயம் மத்திய அரசு உடனே நடத்த வேண்டும்" என்றார்.

ஐபிஎல் கொண்டாட்ட விபத்து குறித்த பேசிய அவர், "பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகத் தான் கர்நாடக அரசு கமிஷனரை தற்காலிக பணி
நீக்கம் செய்து இடமாற்றம் செய்து உள்ளது. குறிப்பாக சொல்ல போனால் முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயலாளரையே மாற்றி இருக்கிறார்கள். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது" என்றார்.

அமித்ஷா வருகையை குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட்டில் ஏதாவது குழப்பம் செய்யலாமா என சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு போதும் பாஜகவுக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் தமிழ் மண்ணில் இடம் இல்லை" என்று தெரிவித்தார்.

மாநில அரசும் மத்திய அரசும் இப்படியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "யாரும் சண்டை போடவில்லை. எங்களுக்கான உரிமையை தான் கேட்கிறோம். எங்களுடைய உரிமை தொகையை கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். ஜி.எஸ்.டி செலுத்துவதில்
மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. ஆனால் எங்களுடைய உரிமை தொகை குறைவாக கொடுக்கப்படுகிறது. பேரிடர் பாதிப்பு வந்த மாநிலத்திற்கு கொடுக்காமல் வராத மாநிலத்திற்கு கொடுக்கிறீர்கள். பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய ரூ.2000 கோடி தொகையை கொடுக்க மறுக்கிறீர்கள். இது போன்ற உரிமை கேள்வியை மட்டும் தான் கேட்கிறோம். தமிழ்நாட்டுக்கு அவர்கள் துரோகம் செய்து கொண்டே இருப்பார்கள், இதுகுறித்து முதலமைச்சர் கேட்காமல் இருப்பார் நினைக்கிறார்களா? பாஜக தலைவர்கள் ஏன் தமிழ்நாட்டில் நலனுக்காக குரல் கொடுப்பது இல்லை?. இதுதான் பாஜகவிற்கு மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்" என்று கூறினார்.

Tags :
Advertisement