முருக பக்தர்கள் மாநாடு - மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
மதுரை பாண்டி கோவில் அருகே நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாளை(ஜூன்.21) மதுரை ரிங் ரோடு கலைஞர் திடலில் முருக பக்தர்கள் மாநாட்டு விழாவானது நடைபெற இருப்பதால் அதில் ஏராளமான முருக பக்தர்களும் பொதுமக்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியூர்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வாகனங்களில் வந்து கலந்து கொள்வதை முன்னிட்டு மேற்படி மநாட்டிற்கு வரும் பொதுமக்கள் மற்றும் முருகபக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்கள் போக்குவரத்து இடையூறின்றி இலகுவாக சென்று வருவதற்கு ஏதுவாகவும் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேருந்துகள் செல்ல வேண்டிய வழித்தடங்கள்:
ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டி கோயில் சந்திப்பு, பி.சி பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூர் ரவுண்டானா சந்திப்பு சென்று தொடர்ந்து மண்டேலா நகர் சந்திப்பு வழியாக செல்லலாம்.
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் விரகனூர் சந்திப்பிலிருந்து மாற்று பாதையாக புதிய தென்கரை சாலை, குருவிக்காரன் சாலை பாலம் சந்திப்பு, அரவிந்த் மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே கே நகர் ஆர்ச் சந்திப்பு, மார்க்கெட் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்லலாம்.
சரக்கு வாகனங்களின் போக்குவரத்து மாற்று பாதை :
மேலூர் சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு வாகனங்களும் மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சந்திப்பினை அடைந்து சிந்தாமணி ரோடு சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவேண்டும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து மேலூர் வழியாக திருச்சி மற்றும் சென்னை நோக்கி செல்லக்கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம் கப்பலூர் சந்திப்பில் இருந்து ரிங் ரோடு வழியாக தேனி ரோடு சந்திப்பு, சமயநல்லூர் சந்திப்பு, வாடிப்பட்டி சந்திப்பு வழியாக திண்டுக்கல், மணப்பாறை வழியாக திருச்சி செல்லவேண்டும்.
பொதுமக்களின் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டிய மாற்றுப்பாதை :
மதுரை நகரில் பி.சி பெருங்காயம் சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் இடமான கலைஞர் திடல் வழியாக விரகனூர் ரவுண்டானா சந்திப்பிற்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
வாகனங்கள் பி.சி பெருங்காயம் சந்திப்பில் இருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக விரகனூர் ரவுண்டானா செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலூர் சாலையிலிருந்து நேரடியாக திருமங்கலம் சாலை மார்க்கமாக திருமங்கலம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் அருப்புக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் விரைவாகவும் இலகுவாகவும் போக்குவரத்து இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் செல்வதை தவிர்த்து மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூர் சாலை வழியாக தனிச்சியம் சந்திப்பிற்கு சென்று கப்பலூர் ரிங் ரோடு சாலையை பயன்படுத்தி விரைவாக செல்லலாம்.
அதேபோல் திருமங்கலம் மற்றும் அருப்புக்கோட்டை சாலையிலிருந்து விரகனூர் மற்றும் பாண்டிகோவில் சுற்றுச்சாலை வழியாக நேரடியாக மேலூர் சாலை மார்க்கமாக திருச்சி மற்றும் சென்னை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனங்களும் விரைவாகவும் இலகுவாகவும் போக்குவரத்து இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் செல்வதை தவிர்த்து கப்பலூர் நான்கு வழிச்சாலை வழியாக துவரிமான் மற்றும் சமயநல்லூர் சுற்றுச்சாலை வழியாக திண்டுக்கல் ரோடு தனிச்சியம் பிரிவு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அலங்காநல்லூர் சாலை வழியாக மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிற்கு சென்று விரைவாக செல்லலாம்.
அதுபோல விரகனூர் ரவுண்டானா சந்திப்பிலிருந்து பி.சி பெருங்காயம் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் மேலுலூர் சாலை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகன போக்குவரத்தும் விரகனூர் ரவுண்டானா சந்திப்பில் இடது புறம் திரும்பி புதிய தென்கரை சாலை, குருவிக்காரன்சாலை, அரவிந் கண் மருத்துவமனை சந்திப்பு. ஆவின் சந்திப்பு, கே.கே. நகர் சந்திப்பு வழியாக செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விழாவிற்கு வரும் பயணாளிகள் வரக்கூடிய வாகனங்களின் வழித்தடங்கள்:
திருமங்கலம் சாலை மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் கப்பலூர் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலாநகர் ரிங்ரோடு மற்றும் விரகனூர் ரவுண்டானா வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி சாலை மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் நாகமலைபுதுக்கோட்டை ரிங்ரோட்டின் வலதுபுறம் திரும்பி திருமங்கலம் கப்பலூர் பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பி மண்டேலாநகர் ரிங்ரோடு மற்றும் விரகனூர் ரவுண்டானா வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொட்டாம்பட்டி, மேலூர் சாலை மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் ஒத்தக்கடை ரிங்ரோடு பி.சி பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் வாடிப்பட்டி சாலை மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் சமயநல்லூர், துவரிமான் சுற்றுசாலை வழியாக கப்பலூர் பாலம் சென்று, இடதுபுறம் திரும்பி மண்டேலாநகர் ரிங்ரோடு மற்றும் விரகனூர் ரவுண்டானா வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நத்தம் மற்றும் அழகர் கோவில் சாலை மார்க்கமாக மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் கடச்சனேந்தல், சர்வேயர்காலனி சந்திப்பு, 120 அடி ரோடு சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, பாண்டிகோவில் ரிங்ரோடு பி.சி பெருங்காயம் சந்திப்பு வழியாக விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டு நிகழ்ச்சியானது போக்குவரத்து இடையூறின்றி நடைபெறும் பொருட்டு ஏற்படுத்தப்பட உள்ள மேற்கண்ட தற்காலிக வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு முருகபக்தர்கள் பொதுமக்கள், வியாபார பெருமக்கள், மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட மதுரை மாநகர் காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிபிடப்பட்டுள்ளது.