முருக பக்தர்கள் மாநாடு - வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து!
மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் நாளை மறுநாள் (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்திற்கும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த மாநாடு நடத்துவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும், ஆன்மிக மாநாட்டில் அரசியல் கலக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பு வழங்கறிஞர், "அதிக அளவில் பொதுமக்கள் கூட கூடிய மாநாடுகளுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்துவது அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை" என்று வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், "மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையிடம் வழங்க வேண்டும். இதனை பதிவு செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்தனர்.