For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்" - அண்ணாமலை பதிலடி

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
03:26 PM Mar 10, 2025 IST | Web Editor
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்    அண்ணாமலை பதிலடி
Advertisement

நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச்.10) நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆம் அமர்வில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.-க்கள் தன்னை சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளத்தில்,

"தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு பேசும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் இருக்கும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர்
மோடி இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!" என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு மூன்று கேள்விகள்.

முதல் கேள்வி:

திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது கேள்வி:

மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?

மூன்றாவது கேள்வி:

யார் அந்த சூப்பர் முதலமைச்சர்?

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. இனியும் தமிழ்நாட்டு மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது"

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement