அதிமுகவுடன் மேலும் பல கட்சிகள் சேரும் .... 2026-ல் அபார வெற்றி பெறும் - எடப்பாடி பழனிசாமி!
அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் 11 மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவந்தோம். மேலும், தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகளும் மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை முடக்கிய பெருமை திமுகவையே சாரும்.
திமுக ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வருவார்கள். ஆனால் அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுகிறார்கள். ஏற்கனவே அறிவித்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திமுக செயல்பட்டு வருகிறது.
மக்களை பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை. வரும் 2026-ல் அதிமுக அபார வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் தடுப்பணைகள் ஏராளமாக கட்டப்பட்டன. திமுக ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக தான். 2010-ம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த பொழுது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவது அதிமுக. ஏழை எளிய விவசாயிகளுக்காக குடிமராமத்து பணி திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளீனிக் திட்டத்தை திமுக முடக்கியது. அதிமுகவினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்ற 2026 தேர்தலில் உங்களுடைய தேர்தலாக நினைத்து பணியாற்ற வேண்டும்.
41 சதவீதம் ஏழை எளிய மக்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் மூலம் மாணவர்களுக்கு அதிகம் பலன் அடைந்தார்கள். தமிழகம் முழுவதும் கமிஷன் கரப்ஷன் என எந்த திட்டத்திலும் தமிழக முழுவதும் கமிஷன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.