மக்களவைத் தேர்தல் 2024 : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 பேர் போட்டி!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தமாக 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27-ம் தேதி முடிந்த நிலையில், வேட்புமனு பரிசீலினையும் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
அடுத்த நாளான 28-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றன. நேற்று (மார்ச் 29) புனித வெள்ளி, பொது விடுமுறை என்பதால் மனுக்கள் வாபஸ் தொடர்பான பணிகள் நடைபெறவில்லை. இந்த சூழலில், இன்று வரை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது.
இந்நிலையில் தொகுதிவாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 135 மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும் 76 பெண்களும் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு கட்சிகளுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது.