இறுதி கட்டத்தை எட்டிய மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு!
ஒடிசா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் நாலை (ஜுன் 1) நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசி தொகுதியிலும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நாளை கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று (மே 30) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. மக்களவை தேர்தல் 2024-க்கான இறுதி பிரசாரம் இதுவே. தேர்தல் விதிகளின்படி, தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின், தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருக்கும் வெளியூர், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மாலை 5 மணிக்கு மேல் இருக்கக்கூடாது.
பிரதமர் மோடி போட்டியிடும் உத்திர பிரதேசம் வாரணாசி தொகுதி உட்பட உ.பி, பீகார், ஒடிசா, சண்டிகர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜார்கண்ட் என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 57 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்கள்:
- பிரதமர் நரேந்திர மோடி (பாஜக) – வாரணாசி தொகுதி (உத்தரப்பிரதேசம்)
- ரவி கிஷன் (பாஜக) – கோரக்பூர் தொகுதி (உத்தரப்பிரதேசம்)
- கங்கனா ரனாவத் (பாஜக) – மண்டி தொகுதி (இமாச்சலப் பிரதேசம்)
- அனுராக் தாகூர் (பாஜக) – ஹமிர்பூர் தொகுதி (இமாச்சலப் பிரதேசம்)
- மிசா பார்தி (ஆர்ஜேடி) – பாடலிபுத்ரா தொகுதி (பீகார்)
- அபிஷேக் பானர்ஜி (டிஎம்சி) – டயமண்ட் ஹார்பர் தொகுதி (மேற்கு வங்கம்)
- சரண்ஜித் சிங் சன்னி (காங்கிரஸ்) – ஜலந்தர் தொகுதி (பஞ்சாப்)
- ஹர்சிம்ரத் கவுர் பாதல் (எஸ்ஏடி) – பதிண்டா தொகுதி (பஞ்சாப்)