ஸ்ரீகாந்தை தொடர்ந்து போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கிருஷ்ணா... ரகசிய இடத்தில் விசாரணை!
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து வருபவர் நடிகர் ஸ்ரீ காந்த். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். கடைசியாக இவருக்கு விஜயின் நண்பன் படம் கம்பேக்காக அமைந்தது. அதன் பிறகு இவரின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. இதனிடையே பார் தகராறில் கைதான பிரதீபன் என்பவர் போலீசாரிடம், ஸ்ரீகாந்த் நாற்பது முறை போதைப்பொருள் பயன்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்தார். அதன்படி நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை கீழ்ப்பாக்கத்தில் வைத்து போலீசார் பல மணி நேரம் பரிசோதனை மேற்கொண்டனர்.
அதன் முடிவில் நடிகர் ஸ்ரீகாந்த் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் வாங்கியது செல்போன் மூலம் அம்பலமானது. மேலும், ஸ்ரீகாந்த் ‘கொகைன்’ என்ற போதைப்பொருளை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்தனர்.
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. ஸ்ரீகாந்தை முதல் வகுப்பு சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ஒப்புதல் அளித்தார். அதன்படி அவர் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிருஷ்ணாவுக்கு நேற்று போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானதாக தெரிகிறது. கடந்த 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை இன்று பிடித்தனர்.
அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அவரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா (கொகைன்) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவையும் போலீசாரால் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.