டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் - மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தெரிவித்தார்.
அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நவம்பர் 10, 2025 அன்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடி விபத்து சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் பேரில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,
*நவம்பர் 10, 2025 அன்று மாலை செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு மூலம் தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவமானது பல உயிரிழப்புகளையும் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
*அமைச்சரவையானது இந்த வன்முறைச் செயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலியை செலுத்துகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
*காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களின் உடனடி முயற்சிகளைப் பாராட்டுகிறது.
*அப்பாவி மக்களை உயிரிழக்க வழிவகுத்த இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை அமைச்சரவை கண்டிக்கிறது.
*பயங்கரவாதத்தின் அனைத்து விதமான வடிவங்கள் மீதும் இந்தியா கொண்டுள்ள பூஜ்ஜிய சகிப்புத்தன்மை இல்லாத கொள்கைக்கான உறுதிப்பாட்டை அமைச்சரவை மீண்டும் வலியுறுத்துகிறது.
* இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் துணை நின்ற உலக நாடுகளின் ஆதரவுகளுக்கு அமைச்சரவை தனது பாராட்டுகளைப் பதிவு செய்கிறது.
*இச்சம்பவத்தின் போது தைரியத்துடனும் இரக்கத்துடனும் செயல்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் குடிமக்களுக்கு அமைச்சரவை நன்றி தெரிவிக்கிறது.
*இந்த சம்பவம் குறித்த விசாரணை மிகவும் விரைவாகவும் தொழில்முறை ரீதியாகவும் தொடரப்பட வேண்டும் என்றும், இதனால் குற்றவாளிகள் மற்றும் அவர்தம் ஆதரவாளர்கள் அடையாளம் காணப்பட்டு தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை அறிவுறுத்துகிறது.
* அனைத்து இந்தியர்களின் உயிர்களையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிதன்மையை அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.