"வாக்கு திருட்டு சதியின் ஒரு பங்காக மாறியுள்ளது" - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தேர்தல் ஆணையம் தற்போது 12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை ஆடத் தயாராகியுள்ளது.
பீஹாரில், SIR என்ற பெயரில் 69 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டன. இப்போது, 12 மாநிலங்களில் கோடிக்கணக்கான வாக்குகள் நீக்கப்படும். இது நரேந்திர மோடியும் தேர்தல் ஆணையமும் இணைந்து நடத்தும் வெளிப்படையான “வாக்கு திருட்டு” செயல்.
பீஹாரில் SIR நடத்தப்பட்டபோது, தேர்தல் ஆணையத்தின் சூழ்ச்சி நாடு முழுவதும் வெளிச்சமிட்டது. உச்ச நீதிமன்றமே கூட இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை கடுமையாக கண்டித்தது. நாடு முழுவதும் “வாக்கு திருட்டு” பல வடிவங்களில் வெளிப்படுகிறது. சில இடங்களில் திட்டமிட்டவாறு வாக்குகள் சேர்க்கப்படுகின்றன; சில இடங்களில் திட்டமிட்டவாறு நீக்கப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பதில் அளித்து, விசாரணை நடத்தியிருக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
ஆனால், அதற்கு மாறாக அது “வாக்கு திருட்டு” சதியின் ஒரு பங்காக மாறியுள்ளது. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR ஜனநாயகத்திற்கு எதிரான - மக்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒரு சதி". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.