For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சபாநாயகர் தேர்தலில் போட்டி ஏன்? நியூஸ்7 தமிழுக்கு கொடிகுன்னில் சுரேஷ் பிரத்யேக பேட்டி!

04:31 PM Jun 25, 2024 IST | Web Editor
சபாநாயகர் தேர்தலில் போட்டி ஏன்  நியூஸ்7 தமிழுக்கு கொடிகுன்னில் சுரேஷ் பிரத்யேக பேட்டி
Advertisement

இந்திய வரலாற்றில் முதன்முறையாக மக்களவை சபாநாயகருக்கு தேர்தல் நடக்க உள்ளது.  இந்நிலையில் தேர்தல் நடக்கும் சூழல் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகர் வேட்பாளராக போட்டியிடும் கொடிகுன்னில் சுரேஷ் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.  

Advertisement

மக்களவை சபாநாயகர் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  இந்நிலையில், 8 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ், இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.  இதனால் இந்திய வரலாற்றில் மக்களவை சபாநாயகர் பதவிக்கு முதன்முறையாக தேர்தல் நடக்கிறது.

இந்நிலையில் கொடிகுன்னில் சுரேஷ் நியூஸ் 7 தமிழுக்கு நேரலை வந்து பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.  அப்போது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

தியாகச்செம்மல்: கடைசி நேரத்தில் சபாநாயகர் வேட்பாளராக இந்தியா கூட்டணி சார்பில் நீங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்.  இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்.? இன்று காலை என்ன நடந்தது? விளக்கி கூற முடியுமா?

கொடிக்குன்னில் சுரேஷ் : மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சபாநாயகர் தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு கேட்டு நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தொடர்பு கொண்டார்.  அப்போது அவர் பாஜக சார்பில் சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்படும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தருமாறு மல்லிகார்ஜுன கார்கேவிடம் கோரிக்கை வைத்தார்.  அப்போது பாஜகவின் சபாநாயகர் வேட்பாளருக்கு இந்தியா கூட்டணி ஆதரவு தர தயார்,  அதே நேரத்தில் துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு தர வேண்டும் என வலியுறுத்தினார்.  ஆனால் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து இன்று (25.06.2024) காலை 10 மணி அளவில் பதில் அளிப்பதாக மல்லிகார்ஜுன கார்கேவிடம் ராஜ்நாத் சிங் கூறினார்.  ஆனால் இன்று ராஜ்நாத் சிங்கை இந்தியா கூட்டணியினர் சார்பில் தொடர்புகொள்ள முடியவில்லை.  இதனை அடுத்து இந்தியா கூட்டணியை சேர்ந்த டி.ஆர்.பாலு மற்றும் கே.சி.வேணுகோபால் காலை 11.30 மணி அளவில் அமித்ஷாவை நேரில் சந்தித்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து ஆலோசித்தனர்.

அப்போது அமித்ஷா முதலில் சபாநாயகர் தேர்தல் முடியட்டும் அதன் பிறகு துணை சபாநாயகர் தேர்தல் குறித்து பேசிக்கொள்ளலாம் எனக் கூறினார்.  இது சரியான பதில் இல்லை.  எங்களுக்கு  பாஜக சார்பில் முறையான உத்தரவாதம் வேண்டும்.  அந்த உத்தரவாதம் கிடைக்காததால் தான் கடைசி நேரத்தில் பாஜகவின் சபாநாயகர் வேட்பாளரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் நான் வேட்பாளராக நிறுத்தப்பட்டேன்.

தியாகச்செம்மல்: இந்தியா கூட்டணி துணை சபாநாயகர் பதவியை குறிப்பிட்டு கேட்பது ஏன்? இந்தியா கூட்டணியின் நோக்கம் என்ன?

கொடிக்குன்னில் சுரேஷ் : சபாநாயகர் பதவிக்கு ஆளும் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தும் அதே நேரத்தில் துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சியினருக்கு வழங்குவதே ஆரோக்யமான வகையில் நாடாளுமன்றம் இயங்குவதை உறுதி செய்யும்.  ஆனால் 16-ஆவது மக்களவையில் பாஜகவின் கூட்டணியில் இருந்த அதிமுகவுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது.  இதனை அடுத்து 17-ஆவது மக்களவைக்கான துணை சபாநாயகர் பதவியே நிரப்பப்படவில்லை.  இதனால் கடந்த 5 ஆண்டுகளாகவே துணை சபாநாயகர் பதவி காலியாகவே இருந்தது.  இந்நிலையில் 18-ஆவது மக்களவையில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் எதிர்கட்சியாக திகழ்கிறது.  நாங்கள் 100 மக்களவை உறுப்பினர்களை பெற்றுள்ளோம்.  இதனால் நாங்கள் எதிர்கட்சித்தலைவராகவும், துணை சபாநாயகராகவும் இருக்கும் முழு தகுதியை பெற்றுள்ளோம்.  அதனால் தான் துணை சபாநாயகர் பதவி குறித்து உத்தரவாதம் தருமாறு ஆளும் கட்சியிடம் கேட்கிறோம்.  ஆனால் ஆளும் கட்சி துணை சபாநாயகர் பதவிக்கான உத்தரவாதத்தை எதிர்கட்சிகளுக்கு வழங்க முன்வரவில்லை.  அவர்கள் சபாநாயகர் தேர்தல் முடிந்த பின் பேசிக்கொள்ளலாம் எனக் கூறுவது சரியல்ல.  சபாநாயகர் தேர்தலில் நாங்கள் ஆதரவு கொடுத்த பின் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள்.  அதனால் பாஜக சார்பில் அதிகாரபூர்வ உத்தரவாதம் தேவை என்று நாங்கள் நினைக்கிறோம்.  ஆனால் அவர்கள் தரப்பில் அப்படி எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை.

தியாகச்செம்மல் : துணை சபாநாயகர் பதவியை கடந்த 5 ஆண்டுகளாக காலியாக வைத்திருந்தற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் விவகாரத்தில் உத்தரவாதம் தரப்படாததற்கு என்ன காரணம் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

கொடிக்குன்னில் சுரேஷ் : நாடாளுமன்ற மரபுப்படியே நாங்கள் துணை சபாநாயகர் பதவியை கேட்கிறோம்.  மரபை பாஜக உடைத்துள்ளது.  எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்குவதே சரி.  ஆனால் எதிர்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்குவதை ஆளும் பாஜக விரும்பவில்லை.  இதனால் தான் நாங்கள் சபாநாயகர் தேர்தலில் போட்டியாக களம் இறங்கியுள்ளோம்.

இது தொடர்பான நேர்காணலை முழுமையாக காண:

Tags :
Advertisement