சென்னையில் நாளை பாஜக சார்பில் இஃப்தார் நோன்பு - தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு!
பாஜக சார்பில் நடக்கும் இஃப்தார் நோன்பு குறித்து சென்னை தி. நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி, சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, “சென்னையில் மூன்றாவது முறையாக இப்தார் நிகழ்ச்சி நடக்க உள்ளது. மிகப் பிரம்மாண்டமாக, திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் நடத்தாத வகையில் சென்னை எழும்பூரில் இஃப்தார் நோன்பு நாளை(மார்ச்.25) மாலை 4:30 மணிக்கு தொடங்க உள்ளது.
நம் கூட்டணி கட்சித் தலைவர்கள் அதில் பங்கேற்க உள்ளார்கள். ஜி.கே வாசன் அன்புமணி ராமதாஸ், ஜான்பாண்டியன் ரவி பச்சமுத்து, டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டோரும் தமிழிசை சௌந்தரராஜன் நயினார் நாகேந்திரன், சரத்குமார் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதை தமிழ்நாடு முழுவதும் நடத்த சொல்லியிருக்கிறார்.
இஸ்லாமியர்கள் குறித்த முக்கிய அறிவிப்பை அண்ணாமலை வெளியிட உள்ளார். உண்மையான இஸ்லாமியர்கள் யார் பொய்யான இஸ்லாமியர்கள் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் திமுக இருக்கிறது என்றால் மோசமானது. திமுக எங்களை அடையாளப்படுத்தினால் தான் நாங்கள் இஸ்லாமியர் என்றால் அதைவிட அருவருக்கத்தக்க வார்த்தைகளை நாங்கள் கேட்க தயாராகவில்லை.
திமுகவின் அரசியலை இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள். வாக்கு வங்கிக்காக பாஜக இந்த நோன்பை செய்யவில்லை. அதற்கான எந்த கட்டாயமும் எங்களுக்கு இல்லை. அனைத்துக் கட்சியையும் நாங்கள் மதிக்கிறோம் என்பதை பறை சாற்றுவதற்காகத் தான். இஸ்லாமியர்களின் கல்வி, பொருளாதாரம், அரசியலுக்கான முன்னெடுப்பு குறித்த அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாடு அரசியலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு கூறினார்கள்.