“பிற்படுத்தப்பட்டோர், ஏழைகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தேவையோ, அவ்வளவு கொடுக்கப்படும்” - ராகுல் காந்தி உறுதி!
50% இட ஒதுக்கீட்டு வரம்பை நீக்கி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு தேவையோ அவ்வளவு இட ஒதுக்கீடு தருவேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் முடிவடைந்த நிலையில், மற்ற மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
கேரளாவின் வயநாட்டைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
“இந்த தேர்தல் இந்திய அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல். பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் அதனை அடியோடு மாற்ற நினைக்கின்றன. அரசியலமைப்பை காப்பாற்றவே நாங்கள் முயற்சிக்கிறோம். மக்களின் உரிமைகள் அனைத்தையும் பறிக்க விரும்புகிறார் பிரதமர் மோடி. நாங்கள் அவரை தடுக்க விரும்புகிறோம்.
பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் பெறும் அனைத்து உரிமைகளுக்கும் இந்த அரசியலமைப்பு சட்டமே காரணம். ஆட்சிக்கு வந்தால் இந்த அரசியலமைப்பு புத்தகத்தையே ஒதுக்கி வைப்போம் என பாஜக தெள்ளத் தெளிவாக சொல்கிறது.
இதனால்தான் 400 இடங்கள் என கோஷமிட்டு வருகின்றனர். அவர்களுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது. இட ஒதுக்கீட்டை நீக்குவதாக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இட ஒதுக்கீட்டிற்கான உச்ச வரம்பை 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்துவோம். 50% வரம்பை நீக்கி, பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழைகளுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு தேவையோ அவ்வளவு இட ஒதுக்கீடு கொடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.