"நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்... என்னை சுற்றி உடல்கள் கிடந்தன" - விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் அதிர்ச்சி தகவல்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமான உள்பட விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தவர். ஒரே ஒரு நபர் மட்டும் காயங்களுடன் உயிர்பிழைத்தார். அவருக்கு தற்போது அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான விபத்தில் இருந்து தப்பிய விஸ்வாஷ் குமார் ரமேஷை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். இதனையடுத்து, சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் தனது மோசமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஸ்வாஷ் குமார் ரமேஷ் கூறியதாவது,
"விமானம் புறப்பட்ட 5-10 வினாடிகளில் எல்லாம் சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தோம். விமானத்தில் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் இயக்கப்பட்டன. புறப்படுவதற்காக விமானத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டதாக நினைக்கிறேன். திடீரென விமானம் கட்டிடத்தில் மோதியது. இதெல்லாம் என் கண் முன்னே நடந்தது. நான் அமர்ந்திருந்த இருக்கை விடுதிப் பக்கத்தில் இல்லை. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அமர்ந்திருந்த பகுதி தரைத் தளத்தில் விழுந்தது, அங்கு சிறிது இடம் இருந்தது.
என் அருகில் இருந்த கதவு உடைந்தவுடன், கொஞ்சம் இடம் இருப்பதைக் கண்டேன். நான் என் சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்தேன். மற்ற பயணிகள், விமானப் பணிப்பெண்களின் உடல்கள் அங்கே கிடந்தன. எதிர் பக்கத்தில் ஒரு கட்டிடச் சுவர் இருந்தது. விமானம் அந்தப் பக்கத்தில் முழுவதுமாக மோதியிருந்தது. அதனால் அந்தப் பக்கத்திலிருந்து யாரும் வெளியே வர முடியவில்லை. நான் இருந்த இடத்தில் மட்டுமே இடம் இருந்தது. நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்டபோது, என் இடது கையும் எரிந்தது. பின்னர் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
இங்குள்ளவர்கள் என்னை நன்றாக நடத்துகிறார்கள். இங்குள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள். இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டார். நான் எப்படி காப்பாற்றப்பட்டேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை. நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்து பார்த்தபோது, நான் உயிருடன் இருந்தேன்"
இவ்வாறு விஸ்வாஷ் குமார் ரமேஷ் தெரிவித்தார்.