"தரமற்ற தடுப்பணையால் தத்தளிக்கும் விவசாயிகள்" - நயினார் நாகேந்திரன்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திருச்சி மாவட்டம் அழகிரிபுரம் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்ததை சீர்செய்யாமல் அரசு அலட்சியப்படுத்துவதால், பயிர் பாசனத்திற்கு பயன்பட வேண்டிய மழை நீர் வீணாகக் கடலில் கலப்பதாகக் கூறி அப்பகுதி விவசாய பெருமக்கள் ஆற்றில் இறங்கி நின்று போராடும் காணொளி மனதை கனக்க வைக்கிறது.
தரமற்ற முறையில் தடுப்பணையைக் கட்டியது மட்டுமன்றி ஊருக்கே படியளக்கும் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து வயிற்றிலடிக்கும் திமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனங்கள். ஏற்கனவே பராமரிப்பற்ற அரசு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கும் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாலும், முறையாக தூர்வாராமல் வறண்டு கிடக்கும் பாசனப் போக்குவரத்தால் பயிர்கள் கருகுவதாலும் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளைத் திமுக அரசு தொடர்ந்து புறக்கணிப்பது முறையல்ல.
எனவே, அழகிரிபுரம் விவசாயப் பெருமக்களின் அத்தனை கோரிக்கைகளுக்கும் செவிமடுத்து அவற்றை நிறைவேற்றுவதோடு, தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள தடுப்பணைகளைக் கட்டுவதற்கும், சேதமடைந்த தடுப்பணைகளை மேம்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.