For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Erode | போலி வெளிநாட்டு கரன்சி... மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்தவர் கைது!

11:12 AM Aug 18, 2024 IST | Web Editor
 erode   போலி வெளிநாட்டு கரன்சி    மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்தவர் கைது
Advertisement

ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தவரிடம் போலியான வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள
தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் ஈரோட்டில் 'அபி டூர்ஸ் டிராவல்ஸ்' என்ற பெயரில் டிராவல்ஸ் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவரது டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாக தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் பணம் கொடுப்பது, விமான டிக்கெட், ரயில் டிக்கெட், திருப்பதி கோயிலுக்கு சென்றுவர முன்பதிவு செய்வது போன்ற சேவைகளை செய்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது டிராவல்ஸ் ஏஜென்சியை மூடிவிட்டு, வேறு ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் அசோக்குமார். இருப்பினும் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கேட்கும் பொழுது வெளிநாட்டு பணத்திற்கு இந்திய பணத்தை மாற்றி கொடுத்து வந்துள்ளார்.

முன்னதாக அசோக்குமார் தனது டிராவல்ஸ் ஏஜென்சிக்கு இணையத்தில் விளம்பரம் செய்த நிலையில், அந்த விளம்பரத்தை பார்த்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு, மருத்துவ செலவுக்காக அவசரமாக 500 அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் மதிப்பில் பணம் தேவை என அசோக்குமாரை அணுகியுள்ளார்.

இதனையடுத்து, அசோக்குமார் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் சாலைக்கு  ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நாதன் இகேச்சுக்வுவை வரச் சொல்லி 500 அமெரிக்க டாலர் பணத்தைக் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக இந்திய மதிப்பில் ரூ.48 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்த சென்ற அசோக்குமார் அமெரிக்க டாலரை ஆய்வு செய்தபோது, அது போலியானவை என தெரியவந்தது.

இதனையடுத்து, அசோக் குமார் உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகரிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில், போலீசார் தனிப்படை அமைத்து நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வுவை தேடிவந்த நிலையில், அவரை கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நாதன் இகேச்சுக்வு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி ஜவுளி விற்பனை செய்து வருவதும், ஏற்கனவே இதேபோன்று கோவை மாவட்டம் காட்டூர் பகுதியில் போலியான வெளிநாட்டு கரன்சியை கொடுத்து கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நாதன் இகேச்சுக்வுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில்  அடைத்தனர்.

Tags :
Advertisement