ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜன.31ம் தேதி கைது செய்தது. அதற்கு முன்பு அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடா்ந்து, ஜேஎம்எம் கட்சியைச் சோ்ந்த சம்பாய் சோரன் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றாா்.
பின்னர் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்ததைத் தொடா்ந்து, கடந்த ஜூன் 28-ஆம் தேதி மாநிலத் தலைநகா் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே, ராஞ்சியில் உள்ள சம்பாய் சோரன் இல்லத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவா்கள் கூட்டம் கடந்த (03.07.2024) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஜேஎம்எம் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரனை தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. ஜாா்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரனே மீண்டும் பதவியேற்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஜாா்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் நேற்று (03.07.2024) ராஜிநாமா செய்தார். இந்த நிலையில் ஹேமந்த் சோரன் கடந்த 04.07.2024 அன்று மீண்டும் ஜாா்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்ககண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். இதனை அடுத்து இன்று (08.07.2024) ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வென்றது.
இந்நிலையில், ஹேமந்த் சோரேனுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.