For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

அண்ணா நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் வலையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
11:19 AM Feb 03, 2025 IST | Web Editor
அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் இன்று அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கம் வரை நடைபெற்றது. மெரினா கடற்கரையை அடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

இதேபோல், தமிழ்நாட்டின் பல இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் அண்ணா சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மலர் வலையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

முன்னதாக அண்ணாவின் நினைவு தினத்தை ஒட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த்தாயின் தவப்புதல்வர்; திராவிட இயக்கத்தின் பிதாமகன், மேடைதோறும் தமிழ் பொழிந்த காவிய மேகம்! இருள்சூழ் தமிழ்வானுக்கு காஞ்சி வழங்கிய ஒளிவெள்ளி! அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, "நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர்" பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், அவர்தம் உயரியக் கொள்கைகளைப் பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம். அண்ணா நாமம் வாழ்க" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Tags :
Advertisement