அதிமுகவின் டம்மி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் - ஓ.பி.எஸ். பேச்சு!
அதிமுகவின் டம்மி பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும், சர்வாதிகாரத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமையை அவர் கொண்டுவந்தார் எனவும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொண்டர்களின் உரிமை மீட்டு குழுவின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். பின்னர் உறையாற்றிய அவர் கூறியதாவது,
“முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மக்களால் மறக்க முடியாத முலமைச்சராக இருந்தவர். அவரது மறைவுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 30 ஆண்டுகளாக பொது செயலாளராக பொறுப்பேற்று திமுக மற்றும் கூட்டு கட்சிகளை எதிர்த்து பாதுகாத்து இவ்வியக்கத்தை வளர்த்தார். 1.50 கோடி தொண்டர்களை ஜெயலலிதா உருவாக்கி கோட்டையாக வைத்திருந்தார். இந்த இயக்கம் நல்ல முறையில் பயணிக்க வேண்டி சட்ட விதிகளை எம்.ஜி.ஆர் இயற்றி நடைமுறைப்படுத்தி வந்தார். அதனை ஜெயலலிதா பாதுகாத்து வந்தார்.
மேலும் அந்த சட்ட விதிகளில் சட்ட விதிகளை மாற்றவோ திருத்தவோ கூடாது என குறிப்பிட்டிருந்தார். அப்படிப்பட்ட விதியை ரத்து செய்யவோ, மாற்றம் செய்யவோ கூடாது என எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட சட்டம் அது. அப்படிப்பட்ட விதியை காலில் போட்டு மிதித்தவர் எடப்பாடி பழனிசாமி தான். டம்மி பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
சர்வாதிகாரத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமையை என கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. பணபலத்தை கொண்டு தான் பொதுச்செயலாளர் என பேசி கொண்டு வருகிறார். இந்த இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கம் ,தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எனக்கு பின்னாலும் நமது கட்சி தான் ஆட்சி பொறுப்பில் இருக்கும். பழனிசாமியால் பறிக்கபட்ட தொண்டர்களின் உரிமையை மீட்க உருவாக்கப்பட்ட குழுதான் இது.
ஒரு தொண்டன் முதலமைச்சராக வர வேண்டும் என்பது தான் மறைந்த இரண்டு தலைவர்களின் நோக்கம். அப்படி கீழே உள்ள தொண்டர்களை மேடையில் அமர வைக்கதான் இந்த போராட்டம்” இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.