பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச் சந்தை - வியாபாரிகள் மகிழ்ச்சி!
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகை வருகின்ற 7ம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமிய பெருமக்கள் தங்களது உற்றார், உறவினர்களுக்கு மாமிச விருந்தளித்து மகிழ்வது வழக்கம். அந்த வகையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் இறுதி கட்ட ஆடுகள் விற்பனை களை கட்டியுள்ளது. ரூ.5000 முதல் ரூ.60,000 வரை தரத்திற்கு ஏற்றால் போல் ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆட்டுச் சந்தையில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மட்டுமல்லாது, கேரளாவை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் பங்கேற்று தற்போது போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தற்போது பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தையில் இறுதிக்கட்ட ஆடுகள் விற்பனையானது அமோகமாக நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.