அமித்ஷா தங்கும் விடுதி அருகே தடையை மீறி பறந்த ட்ரோன் - காவல்துறையினர் விசாரணை!
மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகேயுள்ள திடலில் பாஜக மாநில, மாவட்ட பகுதி நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாக மதுரை சென்றுள்ளார்.
மதுரை சிந்தாமணியில் உள்ள தங்கும் விடுதிக்கு அமித்ஷா வருவதற்கு முன்பாக தடையை மீறி ட்ரோன் பறந்துள்ளது. இதையடுத்து ட்ரோன் பறக்கும் திசையை நோக்கி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஆனால் காவல்துறையினர் செல்வதற்குள் ட்ரோன் கீழே இறக்கப்பட்டுள்ளது. இதனிடையே அந்தப் பகுதியில் விசேஷ நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டதா? அல்லது வேறு நபர்கள் மூலமாக பறக்க விடப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் விமான நிலைய மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மீனாட்சி அம்மன் கோவில், ஒத்தக்கடை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகரப் பகுதிகளில் 2 நாட்களுக்கு ட்ரோன் பறப்பதற்கு மாவட்ட ஆட்சியரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.