மயிலாடுதுறையை அதிரவைத்த இரட்டை படுகொலை - மேலும் ஒருவர் கைது!
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் வடக்குதெரு பகுதியில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்தனர். இதனை தட்டி கேட்பவர்களை இவர்கள் அடித்தும், கொலைமிரட்டல் விடுத்தும் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றதில் சாராய வியாபாரி ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் (பிப்.13) ராஜ்குமார் ஜாமினில் வெளியே வந்தார். அப்போது தெருவில் ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று 17 வயது சிறுவன் கேட்டதாகவும், அந்த சிறுவனை சாராய வியாபாரிகள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தட்டிகேட்ட முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த ஹரிஷ்(25), (பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்) மற்றும் இன்ஜினியரிங் மாணவர் ஹரிசக்தி (20) ஆகியோரை சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவரும் கத்தியால் சரமாரியாக குத்தினர்.
இதில் படுகாயமடைந்த ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த இரட்டை கொலை சாராய வியாபாரம் தொடர்பாக நடைபெறவில்லை எனவும் முன்விரோதம் காரணமாக நிகழ்ந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் ஏற்கெனேவே கைதான தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரின் தந்தையான சாராய வியாபாரி முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.