"டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்" - ஆர்.பி.உதயகுமார்!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து 58 பாசன கால்வாய் மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து வைகை அணையில் இருந்து 58 ஆம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் மனு அளித்துள்ளார். இதனை தொடர்டந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்,
தமிழ்நாடு முழுவதும் மழை பெய்தாலும் உசிலம்பட்டி வறட்சியாக உள்ளது. வைகை அணையிலிருந்து 58 ஆம் பாசன கால்வாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம். டிடிவி தினகரன் குறித்து பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். ஊடக வெளிச்சத்துக்காக டிடிவி தினகரன் எடப்பாடி குறித்து விமர்சனம் செய்கிறார்.
டிடிவி தினகரன் மக்கள் பணியில் கவனம் செலுத்தி பேச வேண்டும். அவரை பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம். டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யாததால் நெல் முளைத்து வீணாகியுள்ளது. டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது. டெல்டா விவசாயிகள் திமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.