எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் ரூ.1 கோடிக்கு மான நஷ்ட வழக்கு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரியும் திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக கடந்த 8-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதே போல இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
மேலும், போதைப்பொருள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீதும் கிரிமினல் அவதூறு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி திமுக சார்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் போதைப்பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுக-வை தொடர்புபடுத்தி பேசியதாகவும், இதனால் திமுக கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க கோரியும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.