"ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்" - அண்ணாமலை வலியுறுத்தல்!
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள்தான், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து, அடுத்த நிலையில் உள்ள மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கொண்டு செல்பவர்கள்.
ஆனால், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும், தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. இது குறித்து தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம், பலமுறை கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு பாராமுகமாக இருப்பது துரதிருஷ்டவசமானது. பொதுவாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது, ₹1,000 முதல், ₹2,734 வரையே வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த மாத வருமானம் காரணமாக, பெரும்பாலான தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணையாததால், அவர்களுக்கு இந்தக் குறைந்தபட்ச ஓய்வூதியம் கூட கிடைக்காமல் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறார்கள்.
தமிழ்நாடு தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, கருணை ஓய்வூதியம் வழங்கக் கோரி, தமிழக பாஜக மாநிலத் தலைவர், நயினார் நாகேந்திரன் கடந்த 14.03.2025 அன்று, சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதனை அடுத்தே, இத்தனை நாட்களாக, ஓய்வு பெற்ற தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேலாண்மைத் துறை, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்துள்ளது. ஆனால், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, தற்போது தனி நிதியம் பராமரிக்கப்படுவதில்லை என்றும், எதிர்காலத்தில், ஊழியர்களின் பங்களிப்பு இருந்தால், ஓய்வூதியம் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
விவசாயிகளிடம் நேரடியாகப் பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. அதற்கு தனி நிதியம் அமைக்கவில்லை. ஆனால், அவர்கள் கொள்முதல் செய்த பாலை, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இரண்டாம், மூன்றாம் கட்ட நிலையிலுள்ள ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்க, தனி நிதியம் பராமரிக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்பது, ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் இல்லை என்றால், பால் உற்பத்தித் துறைக்கே தமிழகத்தில் வேலை இருக்காது என்பதுதான் உண்மையான நிலைமை. இத்தகைய சூழலில், தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருவது வருந்தத்தக்கது மட்டுமின்றி, சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
சுமார் 2,000 தொடக்க பால் கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்படப் போவதில்லை. ஆனாலும், அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க மனமில்லாமல், அவர்கள் கோரிக்கையைத் தொடர்ந்து திமுக அரசு புறக்கணித்து வருவது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக, பால் உற்பத்தித் துறையில், மாவட்ட மற்றும் மாநில அளவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க, தனி நிதியம் அமைத்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவர்களின் இதர கோரிக்கைகளான, மருத்துவக் காப்பீடு, தினசரி 500 மி.லி. பால், மற்றும் பண்டிகை காலங்களில் ஆவின் இனிப்பு, நெய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறோம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.