“திமுக - காங். மாதிரி காதல் திருமணம் இருக்கக்கூடாது...” - அண்ணாமலை விமர்சனம்
அனைத்து இளைஞர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்றும், திமுக- காங்கிரஸ் போன்று காதல் திருமணம் செய்யக்கூடாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
“மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக மத்திய பிரதேசத்தில் போட்டியிடுவது மகிழ்ச்சி. அவரது பணி சிறக்கட்டும். எல்.முருகனை நீலகிரியில் போட்டியிடுங்கள் என நாங்கள் கூறவில்லை. நீலகிரி தொகுதியை வலுப்படுத்தி தரவேண்டும் என்றுதான் கேட்டிருந்தோம். நீலகிரியில் பாஜக வேட்பாளர் தயாராக இருக்கிறார். நீலகிரி தொகுதியை தயார்படுத்தும் பொறுப்பு மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் இருக்கிறது.
சட்டமன்றத்தில் இரண்டு தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது காலத்தின் கட்டாயம். சுதந்திர இந்தியாவில் முதல் நான்கு தேர்தல்களைப் பொறுத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கை மக்கள்தொகை அடிப்படையில் இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை முதல் 20 ஆண்டுகள் ஒரே தேர்தல் தான் இருந்தது.கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை ஆதரித்திருப்பார். அவரது மகன், முதலமைச்சர் ஸ்டாலின் அவர் தந்தையின் புத்தகத்தை படித்தாரா? என தெரியவில்லை. 2024-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.
இரண்டு முறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். விவசாயிகள் சும்மா சும்மா டெல்லிக்கு வந்தால் என்ன அர்த்தம். சில விவசாயக் குழுக்களுக்கு தேர்தல் வந்தால் மட்டும் கண் திறக்கும். விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், கள்ளுக்கடையை திறக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் சட்டமாக இயற்ற இயலாது. குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக கொண்டு வரப்பட்டால், ரூ.40 லட்சம் கோடி தேவைப்படும்.
இதையும் படியுங்கள் : ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானங்கள் – சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!
எனது திருமணம் கூட காதல் திருமணம்தான். அனைத்து இளைஞர்களும் நன்றாக இருக்க வேண்டும். திமுக-காங்கிரஸ் போன்று காதல் திருமணம் இருக்கக்கூடாது. மோடி-பிஜேபி போன்று காதல் திருமணம் இருக்க வேண்டும்.”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.