”குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா.?”- நயினார் நாகேந்திரன் கேள்வி!
சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய 5 மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிகளையும் தனியாரிடம் விட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வேலை இழப்பு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் தனியாருக்கு விடக்கூடாது என்றும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அம்மண்டலங்களின் தூய்மைப் பணியாளர்கள் வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
”சென்னையில் ஐந்தாவது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், தலைநகரமே குப்பைக் கூளமாக உருமாறிக் கிடக்கிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் மலையாகக் குவிந்து கிடக்கும் குப்பைகளைத் தாண்டி குதித்துச் செல்கிறார்கள். சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கை மூடிக் கொள்கின்றனர். எங்கு எப்போது என்ன பெருந்தொற்று உருவாகுமோ என அனைவரும் பதற்றத்தில் உள்ளனர். ஆனால், சென்னை மேயர் திருமதி. பிரியா உள்ளிட்ட ஆளும் அரசைச் சேர்ந்த அதிகாரிகளோ, அமைச்சர்களோ, முதல்வரோ போராடுபவர்களின் கோரிக்கைகளுக்கு இதுநாள் வரை செவிமடுக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களை நேரில் சென்று சந்தித்து சமாதானம் செய்யவும் இல்லை. பெருகிவரும் குப்பைகளால் வரப்போகும் ஆபத்தை அறியாமல் தங்கள் வீடு, இடம், அலுவலகம் ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என போராட்டக்காரர்களையும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் ஒருசேர அலட்சியப்படுத்தும் திமுக அரசு, மக்களிடம் இருந்து இன்னும் எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் திருந்தப் போவதில்லை! அடுத்த முறை அரியணை ஏறும் வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை”
என்று தெரிவித்துள்ளார்.