மாநில அரசின் தவறான அணுகுமுறையால் கோவை,மதுரை மெட்ரோ பணியில் தாமதம் - எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“கடந்த 18 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் சிவக்குமார் மேகதாது அணை விரைவில் கட்டி முடிக்கப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்காக நீர்வளத் துறையின் ஆணையை விரைவில் பெறுவோம் எனவும் தெரிவித்திருந்தார். தமிழக அரசு இந்த விஷயத்தில் மெத்தனபோக்கோடு இருக்கிறது. இது குறித்து இந்தியா கூட்டணியில் அங்கம் வைக்கும் திமுக தங்களது கூட்டணிக் கட்சி தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு ஏற்படுத்த வேண்டும்.
கோவையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது சம்பந்தமாக மத்திய அரசு தமிழக அரசின் அறிக்கை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், 2025 ஆம் ஆண்டைக் கணக்கில் கொண்டு, தற்போது உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுத்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசின் தவறான அணுகுமுறையால் இந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் முறையாக தெளிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு உள்ளது. தனக்கு வேண்டியவர்களை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்ற உத்தரவை திமுக அரசு ஏற்கவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. பள்ளி மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொள்ளப்படும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி எஸ்.ஐ.ஆர் பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். திமுக தலையீடு காரணமாக எஸ்.ஐ.ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை. தேர்தல் பணியில் ஈடுபடும் பி.எல்.ஓ அலுவலர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். அரசின் அழுத்தம் காரணமாக அவர்கள் செயல்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.