அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டு : பள்ளி , கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பல்வேறு போட்டிகளை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ல செய்து குறிப்பில், ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டினையொட்டி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். தமிழ்நாடு அரசு, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் போற்றிப் பாதுகாத்து, சமூகநீதி, சமநிலை மற்றும் மக்கள் நலனிற்காக அயராது பாடுபட்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 26.11.2025 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள். அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள். மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள்,கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.