கோவை | தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவி சடலமாக மீட்பு!
கோவை, பீளமேடு அருகே பிரபல தனியார் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாட்டு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ - மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் நாமக்கல் பகுதியை சேர்ந்த பவபூரணி (வயது 28) எம்.பி.பி.எஸ். படித்து முடித்து விட்டு, மயக்கவியல் துறையில் முதுகலை படித்து வந்தார். அவர் அந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தார்.
இந்த நிலையில், விடுதி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற மாணவி பவபூரணி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் அவருடைய அறையில் தங்கி இருந்த சகமாணவிகள் கழிவறைக்கு சென்று கதவை தட்டினர்.
பலமுறை தட்டியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த மாணவிகள்,
கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து
வந்து கல்லூரி நிர்வாகத்தினர் கழிவறையின் கதவை உடைத்தனர்.
அப்போது, மாணவி பவபூரணி அங்கு உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவறிந்த பீளமேடு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.