சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து - நயினார் நாகேந்திரன் இரங்கல்!
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருந்து பரங்கிமலை வரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. போரூரில் இருந்து நந்தம்பாக்கம் பகுதி வரை ரயில்வே பாலத்தின் கீழ் 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக 2 தூண்களுக்கு மத்தியில் ராட்சத 'கர்டர்' அமைக்கப்பட்டன. சுமார் 40 அடி நீளமுள்ள ராட்சத 'கர்டர்' நேற்று இரவு திடீரென மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் சரிந்து விழுந்தது. அப்போது பரங்கிமலையில் இருந்து போரூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ராட்சத கர்டருக்கு அடியில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன…
— Nainar Nagenthiran (@NainarBJP) June 13, 2025
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.