"திமுக கூட்டணி கட்சிகளுடனும் பாஜக பேச்சுவார்த்தை" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
"இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளவர் பிரதமர் மோடி. பத்தாயிரம் கோடிக்கு மேல் விவசாயத்திற்கு செலவு செய்துள்ளார்கள். நாட்டின் பாதுகாப்பு , நாட்டின் வளர்ச்சி, ஆதாரமாக இருக்கும் விவசாயம், ரயில் விமான போக்குவரத்து என உலக அளவில் பேசப்படுகிற அளவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை மோடி தந்திருக்கிறார்.
உலக அளவில் பொருளாதாரத்தை நான்காவது நாடாக தந்திருக்கிறார். 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் 10 லட்சம் கோடி நிதி தனியாக கொடுத்துள்ளார்கள். இதுவரை நிதி பாக்கி இல்லாமல் கொடுத்திருக்கிறார்கள். திருக்குறளை 63 மொழிகளில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள். அதேபோல், பிரதமர் மோடி காசி, குஜராத்திலும் தமிழ் சங்கத்தை நடத்தியிருக்கிறார்கள் அது மிகப்பெரிய பெருமை.
தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக் கட்சியின் ஆட்சி தான் நடைபெறும். இபிஎஸ் தலைமையில் கூட்டணி அமையும். கூட்டணி கட்சியில் ஆட்சி அமையும். எங்கும் மதவாதம் இல்லை, ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட்சிக்கு வர முடியாது, இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள், இந்து என்பது ஒரு பண்பாடு ஒரு வழிமுறை, இந்து என்ற மதம் இல்லை.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதைப்பற்றி இப்போது சொல்ல முடியாது. இன்னும் தேர்தலுக்கு பத்து மாதங்கள் இருக்கிறது. நிறைய பேர் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.