"மீனவர்கள் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை" - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் செய்தியை அடிக்கடி கேட்டு வருகிறோம். இதற்கு அவசர நிலையின்போது, இந்தியா, இலங்கையுடன் போட்டுக்கொண்ட சர்ச்சைக்குரிய ஒரு ஒப்பந்தமே காரணம். இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா நம்மிடம் இருந்த சில மீன்பிடி உரிமைகளை இலங்கை விட்டுக்கொடுத்து விட்டது. அந்தக் காலக்கட்டத்தில் நாடாளுமன்றம் சரியாக இயங்கியிருந்தால், இந்த ஒப்பந்தமே ஏற்பட்டு இருக்காது. இந்த ஒப்பந்தத்தின் விளைவு இன்னமும் தமிழ்நாட்டில் எதிரொலித்து கொண்டிருக்கிறது" என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"கடந்த 11 ஆண்டு பாஜக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில், மத்திய காங்கிரஸ் அரசு கச்சத்தீவு குறித்து இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தினால் தான் மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். 1974 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின் போது, நெருக்கடி நிலை அமலில் இல்லை.
இந்த ஒப்பந்தம் குறித்து 1974 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன்சிங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றியிருக்கிறார். இந்த விவாதத்தில் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்று கருத்துகளை கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்திற்கு தெரியாமல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
அறிக்கை
கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை மூடி மறைப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில், ஒன்றிய காங்கிரஸ்… pic.twitter.com/5DBu8GVAGx
— Selvaperunthagai K (@SPK_TNCC) June 28, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பிரதமர் வாஜ்பாய் 6 ஆண்டுகால ஆட்சியிலும், பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியிலும் கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை பிரதமர்களோடு எப்போதாவது பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா? உண்மையிலேயே மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவு காரணமாக இருந்தால் அதுகுறித்து இலங்கை அரசிடம் பேசியிருக்கலாம். மாறாக, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளேடுகளுக்கு அளித்த பேட்டியில், கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் கோரிக்கையாக இருக்கிறதே என்ற கேள்விக்கு, பதிலளிக்கும் போது, ‘சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்னென்ன செய்ய முடியும் என்பதை செய்வது தான் எங்களது நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.
கச்சத்தீவை மீட்க வேண்டுமென்று சொன்னால், இந்திய அரசு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில் என்று கூறுவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும். இதன்மூலம் கச்சத்தீவை மீட்பதற்கு அக்கறையில்லை என்பதைத் தான் இது உறுதிபடுத்துகிறது. ஆனால் கச்சத்தீவை வழங்கியது குறித்து, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த போது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பதிலில், இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட எந்த பகுதியும் வழங்கப்படவில்லை என்றும், எந்த பகுதியும் கையகப்படுத்தப்படவில்லை என்றும் பதில் கூறியதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அதேபோல, பாஜக ஆட்சி அமைந்தவுடன் உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவு குறித்து தொடுக்கப்பட்ட வழக்கில் அன்று தலைமை வழக்கறிஞராக இருந்த முகுல் ரொக்டகி தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு இந்திய அரசால் வழங்கப்பட்டது. அதை மீட்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. கச்சத்தீவை மீட்பதற்காக இலங்கை அரசுடன் போரையா தொடுக்க முடியும்? என்று கூறியதை பாஜகவினர் எவராவது மறுக்க முடியுமா? கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 டிசம்பர் வரை 10 ஆண்டுகளில் சுமார் 400 படகுகள் உட்பட 3179 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இருநாட்டு பிரதிநிதிகளை கொண்ட கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி இருநாட்டு மீனவர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய இக்குழு 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறையும் கூடவே இல்லை. மீனவர் பிரச்னையில் தீர்வு காண்பதற்கு மத்திய பாஜக அரசிற்கு அக்கறையில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகில் கைது செய்யப்படுவதில்லை. ஆனால், இரவு நேரங்களில் சர்வதேச எல்லையை அறியாமல் இலங்கை கடற்பகுதியில் செல்லும் போது கைது செய்யப்படுகிறார்கள். எனவே, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையில், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தர இலங்கை அரசோடு பேச மத்திய பாஜக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
இதைப்போன்ற ஒரு பேச்சுவார்த்தை மன்மோகன்சிங் ஆட்சியின் போது, 2013 இல் இலங்கை அரசோடு நடத்தப்பட்டதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். எனவே, 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி பிரச்னையை திசைதிருப்பக் கூடாது. இதன்மூலம் மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பாஜகவுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது"
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.