மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக கூட்டணி! மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!
மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்கள் 4 பேரின் பதவிக்காலம் நிறைவுற்றதால் மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகளின் ஆதரவை கோரும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறை ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இருப்பினும் பாஜக தனிப் பெரும்பான்மையை இழந்தது. கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தான் ஆட்சி அமைத்துள்ளது. எனவே எந்த ஒரு மசோதாவை நிறைவேற்றவும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். இந்நிலையில் மாநிலங்களவையிலும் தனது பலத்தை பாஜக இழந்திருக்கிறது.
ஏனெனில் நியமன எம்.பிக்களான ராகேஷ் சின்ஹா, ராம் ஷாகல், சோனல் மன்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் தங்களது பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவால் நியமிக்கப்பட்டவர்கள். இந்த 4 பேரின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86ஆக குறைந்துள்ளது.
அதாவது, அதிமுக (4), ஜெகன் மோகன் ரெட்டி (11) ஆகிய கட்சி எம்.பிக்களின் ஆதரவை கோர வாய்ப்புள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அதிமுக உடனான கூட்டணியை பாஜக முறித்து கொண்டது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி பாஜக உடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக கூறி வருகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆட்சியிலும் வெளியில் இருந்து பாஜகவின் மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தற்போது அதற்கான வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்த தெலுங்கு தேசம் உடன் தான் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது. இது தவிர ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தளக் கட்சிக்கு 9 எம்.பிக்கள் இருக்கின்றனர்.
ஆனால் இந்த கட்சியை தோற்கடித்து தான் ஒடிசாவில் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. மேலும் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று நவீன் பட்நாயக் கூறியிருந்தார். எனவே இவர்கள் ஆதரவை பெறுவதிலும் சிக்கல் இருக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தற்போது 87 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் மாநிலங்களவையிலும் இந்தியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுடன் அரசியல் மாற்றங்கள் நிகழலாம், இது மாநிலங்களவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் பலத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த சூழல் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளைப் மாநிலங்களவையில் பெறுவதில், காங்கிரஸ் சாதகமான சூழல் உருவாகியுள்ளது.