சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு!
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று (டிச.15) முதல் 23-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது.
முன்னதாக இதுகுறித்து வெளியிட்ப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது,
“தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் வருகின்ற 15.12.2025 (இன்று) – திங்கட் கிழமை முதல் 23.12.2025 செவ்வாய்க் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்; முதல் நாளான 15.12.2025 (இன்று) நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.