For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

05:16 PM Jul 07, 2024 IST | Web Editor
ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்நிகழ்வு குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலையாளிகளை பிடிக்க 5 தனி பிரிவு அமைக்கப்பட்டு காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பூரில் உள்ள பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் கட்சித் தொண்டர்கள், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மேலும், பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் நினைவு மண்டபம் அமைத்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பெரம்பூரில் இருந்து பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பெரம்பூரில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் ஊர்வலமாக எடுத்துசெல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், உறவினர்கள் மற்றும் மக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தையொட்டி அந்த வழித்தடம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement