நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் - பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய திமுக!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தேர்தல் தயாரிப்பு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாகியுள்ளன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.
மக்களவை தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் முதல் மே 2வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், INDIA – கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. 3 குழுக்களை சமீபத்தில் அமைத்தது. இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை ஈடுபட்ட நிலையில் இன்னும் தொகுதிகள் முடிவாகவில்லை. இந்த வாரத்தில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வாய்ப்புள்ளது.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டது. அதன்படி தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை தி.மு.க. இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார் எனவும் ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள தி.மு.க. துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும் எனவும் அதேபோல சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும்” எனவும் தி.மு.க. தலைமை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 36 பொதுக் கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளவும் அதேபோல "பாசிசம் வீழட்டும்.... இந்தியா வெல்லட்டும்..." எனும் தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளவும் திமுக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.