Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தந்தைக்கு உள்ள அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும்" - திருமாவளவன் பேட்டி!

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
11:43 AM Jun 30, 2025 IST | Web Editor
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Advertisement

மேலவளவு செல்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர்,

Advertisement

"ஜூன் 30 இன்று மேலவளவு அரசியல் உரிமை போராளிகளின் வீரவணக்க நாள் மேலவளவு முருகேசன் மற்றும் அவருடைய தலைமையிலான தோழர்கள் ஏழு பேர் கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்ட துயரமான நாள். தஞ்சை கிழவன் மணிக்கு பிறகு தமிழகத்தில் நடந்த கொடூரமான சாவிய வன்கொடுமை மேலவளவு துயரம்.

இந்த நாளில் மேலவளவு முருகேசன் உள்ளிட்ட தோழர்களுக்கு எனது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறேன். சாதிய வன்கொடுமையாக கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மேலவளவு கிராமத்தை அரசு சிறப்பு கவனம் செலுத்தி மேம்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கி இருக்கிறோம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதற்கு சட்ட வரையறைகள் இடம் அளிக்கின்றன இன்று அந்த கிராமத்திலே சுடுகாட்டு பாதை இல்லை என்பது கவலை இருக்கிறது. தொடர்ந்து முறையிட்டு வருகிறோம் அந்த கிராமத்தில் உள்ள எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா இல்லை. எனவே அந்த கிராமத்தை மேம்படுத்துவதற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழகம் தழுவிய அளவில் ஆங்காங்கே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழும் போது காவல்துறையினர் எதிர் தரப்பினரிடம் மனு பெற்று பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்கு பதிவு செய்வது என்பது இன்னும் தொடர்கிறது. இது அதிகாரவர்க்கத்தின் ஓரவஞ்சனை நடவடிக்கையாக உள்ளது. தலித் விரோத நடவடிக்கையாக உள்ளது. பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது வழக்கு தொடுப்பது என்பது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்ற செயலாகும். தமிழ்நாடு அரசு குறிப்பாக காவல்துறை பாதிக்கப்பட்ட மக்கள் மீது எதிர் வழக்கு தொடுக்கிற காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுமாறு நீதித்துறை வழங்கி இருக்கிற தீர்ப்பு ஒரு ஜனநாயக படுகொலை. அரசியல் கட்சிகள் இதனை அமைதியாக வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த தீர்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முதலில் விடுதலைச் சிறுத்தைகளின் கொடிக்கம்பங்களை இடிப்பதிலே ஆர்வம் காட்டுகிறார்கள்.

பல அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கல் அப்படியே பாதுகாப்பாக இருக்கிறபோது விடுதலை சிறுத்தைகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அதிகாரிகள் முனைப்பாக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. நீதிமன்றத்தில் முறையிட்டு இருக்கிறோம். திமுக, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் இந்த அரசியல் உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும். பொது இடங்களில் எவ்வளவோ பிற காரணங்களுக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கின்றன.

அவற்றையெல்லாம் அப்புறப்படுத்துவதற்கு நீதித்துறையில் எந்த முனைப்பும் காட்டாத போது, யாரோ ஒரு சிலர் தொடுக்கிற வழக்கை வைத்துக்கொண்டு இதுபோன்ற தீர்ப்புகளை அளிப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு போக்காக விடுதலை சிறுத்தை கட்சி பார்க்கிறது. இந்த தீர்ப்பு ஏற்புடையதல்ல புதிய புதிய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் எதிர்காலத்திலும் தோன்றும். அவர்கள் எல்லாம் தங்களின் இருப்பை வெளிப்படுத்துவதற்கு வேறு என்ன வழிமுறை இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. எனவே இந்த தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்க மறுக்கிறது இந்த அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அதிமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், "ஏற்கனவே இதைப்பற்றி நான் சொல்லி இருக்கிறேன். அமித்ஷா மட்டும்தான் திரும்ப திரும்ப கூட்டணி ஆட்சி என்ற கருத்தை சொல்லி வருகிறார். இதுவரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த கருத்தையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தேன். தற்போது அவர் அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லியிருக்கிற பதில் பாஜகவுக்கு தான் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கூட்டணி ஆட்சி இன்று இல்லை அதிமுக அதற்கு உடன்படாது என்கிற விடையை பாஜகவினருக்கு தான் சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் நீங்கள் அதிமுக கூட்டணியில் சேர்வீர்களா என்ற கேள்விக்கு, இது யூகமான கேள்வி என்று பலமுறை சொல்லி இருக்கிறேன் அப்படி ஒரு நிலை வருகிற போது கேள்வி எழுப்புங்கள் பதில் சொல்லுகிறேன்.

திருப்புவனம் இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்த கேள்விக்கு, "அது மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு சம்பவம். காவல் துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர் அஜித்குமார் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், புலன் விசாரணையில் இப்படி உயிரிழப்பு நேர்வதை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு காவல்துறையினருக்கு உரிய வழிகாட்டுதல்களை தர வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் கஸ்டோடியல் டெத் என்பது நிகழக் கூடாது அதை அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்கிற போது நாம் சுட்டிக் காட்டி வருகிறோம். ஆனால் இது தொடர்கதையாக நீடிக்கிறது கவலை அடிக்கிறது.

திடீரென திருமாவளவனுக்கு ராமதாஸ் மீது என்ன பாசம் என அன்புமணி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, பாசம் என்பது ஒரு வலிமையான வார்த்தை. நாங்கள் குறிப்பிட்டது அந்த அடிப்படையால் அல்ல தந்தை மகனுக்கு இடையே ஏற்படுகிற இடைவெளி பெரிதாகி விடக்கூடாது என்கிற அடிப்படையில் சொல்லப்பட்ட ஒரு பொறுப்பான வார்த்தை அவ்வளவுதான். தந்தைக்கு இருக்கிற அனுபவத்தை அல்லது அவர் இருக்கிற ஆளுமையை அன்புமணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னேனே தவிர வேறு, எந்த நோக்கத்திலும் நான் சொல்லவில்லை. அந்த கட்சி எப்படியாவது போகட்டும் என்று நான் கருதவில்லை.

அந்த கட்சியும் இங்கே எளிய மக்களுக்காக போராடுகிற கட்சி என்று நம்புவதால் அவர்களுக்கு இடையிலான இடைவெளி ஏற்பட்டு விடக்கூடாது. அந்த இடைவெளியை பயன்படுத்தி பாசிச சக்திகள் உள்ளே நுழைந்து விடக்கூடாது. சனாதன பாசிஸ்டுகள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள், எச்சரிக்கையாக இருங்கள். யாரோ சொல்லுவதை கேட்பதைவிட தந்தை சொல்வதைக் கேளுங்கள் என்று ஒரு பொறுப்பான வார்த்தையாகத்தான் அதை குறிப்பிட்டேனே அதை தவிர பிணைப்பான வார்த்தையாக சொல்லவில்லை" என கூறினார்.

Tags :
ADMKAirportAmitshaAnbumani RamadossBJPEPSMaduraithirumavalavan
Advertisement
Next Article