மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்!
மதுரையில் பாஜக நிர்வாகிகளின் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் வரை பாஜக நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நள்ளிரவு மதுரை சென்றார். அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே அமித்ஷா வருகையை ஒட்டி மதுரையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை ரிங் ரோடு பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.