”அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்” - நயினார் நாகேந்திரன் பேட்டி!
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
“அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை, யார் அந்த சார் என்று ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது. ஆனால் குற்றப்பத்திரிக்கைகள் காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை. அது தெளிவில்லாமல் இருக்கிறது தெளிவு படுத்த வேண்டியது தமிழ்நாடு முதலமைச்சரின் பொறுப்பு.
அனைத்துக் கட்சிகளுமே ஓரணியில் வரவேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமாக உள்ளது. தமிழ்நாட்டில் தான் நவீன வகையான போதை மருந்து நடமாட்டம் இருக்கிறது. திமுக தோல்வி பயத்தில் இருக்கிறது. தோல்வி பயத்தில் இருப்பதால்தான் எங்கள் கூட்டணியை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உறுதியாக இருந்தால் எங்கள் கூட்டணியை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
காங்கிரஸோ, திமுகவை பற்றியோ கூட்டணி பற்றிய எந்த குறையும் நாங்கள் கூறவில்லை. அப்படி இருக்கையில் முதலமைச்சர் எங்களை பார்த்து பயந்து ஏன் குறை சொல்ல வேண்டும். மதுரைக்கு எட்டாம் தேதி வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தவிர்க்கப்படாத முடிச்சுகள் அதிகம் உள்ளது, பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களிடம் உள்ளது. அதை தீர்த்து வைப்பது முதலமைச்சரின் கடமை முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும். தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் உள்ளனர்.
அனைத்து எதிர்கட்சிகளும் திமுகவை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும், திமுக கூட்டணிக்கு தேமுதிக மற்றும் பாமகவை, செல்வப் பெருந்தகை அழைத்துள்ளார், இது குறித்து அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளான இன்று அவருக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்து விட்டேன். அண்ணாமலை மாநில தலைவராக இருந்தபோது தமிழக அரசியல் களம் அதிரடியாக இருந்தது, தற்போது அமைதியாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உண்டு. அவர் அதிரடியான அணுகுமுறையை கையாண்டார், நான் அமைதியான அரசியல் செய்ய விரும்புகிறேன்.
தமிழை உயர்த்தி பேசினால் நாங்கள் வரவேற்போம், ஆனால் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி ஒரு மொழியை உயர்த்திப் பேசினால் தேவையில்லாத விவகாரங்கள் வரும் அதை தான் கமல்ஹாசன் செய்துள்ளார்.
தமிழ் 5000 வருடத்திற்கு முன்பானது என்பதை யாரும் மறுப்பதற்கு கிடையாது. ஆனால் அதற்காக மற்றொரு மொழி சிறுமை என்று கூற முடியாது அனைத்து மொழியுமே உயர்ந்தது. தமிழை உயர்த்தி பேசுவது தப்பில்லை அதற்காக மற்றொரு மொழியோடு அதை ஒப்பிட்டு பேசுவது என்பது தான் தவறு.
முதலமைச்சர் பிரதமரை சந்தித்த பின்னர் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக செந்தில் பாலாஜி விவகாரத்திலும் டாஸ்மார்க் விவகாரத்திலும் அதிரடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் இரண்டு பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,
அமலாக்கத்துறை என்பது தனித்துறை மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அமலாக்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது வழக்கமான நடைமுறையில் நிர்வாக ரீதியான மாற்றம் ஒன்றாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன்.
முருகன் மாநாடு மிகப்பெரிய அளவில் அனைவரின் ஆதரவோடு நடைபெறும் என்பதை சந்தேகம் இல்லை. முருகன் மாநாடு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், சேகர்பாபு நல்ல ஆன்மீகவாதி சபரிமலை கோயிலுக்கு அடிக்கடி சென்று வருகிறார் ஆனால் அவர் இருக்கிற இடம் அப்பேர்ப்பட்ட இடமாக உள்ளது. அதனால் அவ்வாறு பேசுகிறார் முருகன் மாநாட்டிற்கு மிகப்பெரிய ஆதரவு தமிழக மக்களிடையே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.