3நாள் சுற்றுப் பயணம் நிறைவு - டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி!
தமிழ்நாட்டின் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அயோத்தி கும்பாபிஷேகத்திற்காக புனித நீருடன் மதுரையில் இருந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.
கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் 3 நாட்களுக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். நேற்று முன்தினம் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதனையடுத்து கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.
நேற்று காலை சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்ற பிரதமர், கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் செய்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் பேக்கரும்புக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேஸ்வரம் சென்றார். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார். அதன்பின் ராமசாமி கோயிலுக்கு சென்ற பிரதமர் அங்குள்ள 22 கிணறுகளில் புனித நீராடினார். பின் ராமர் பாதத்தை தரிசித்தார்.
இந்நிலையில் இன்று அரிச்சல்முனைக்கு சென்ற பிரதமர் மலர்கள் தூவி வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம கோயிலில் தரிசனம் செய்தார். பின் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சென்றார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.