நெல்லையை உலுக்கிய ஜாகிர் உசேன் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!
திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி (60). காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டராகப் (எஸ்.ஐ) பணியாற்றிய இவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற இவர், திருநெல்வேலி முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் முத்தவல்லியாக இருந்தார்.
ரம்ஜான் நோன்பு இருந்த அவர் கடந்த மார்ச் 18ம் தேதி அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு, தெற்கு மவுன்ட் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். இடப் பிரச்சினை காரணமாகவே இந்த கொலை நடந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவர் சரணடைந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கெனவே சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரர் பீர்முகமது கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஜாகிர் உசைன் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.