"காங்கிரஸ், விசிகவுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்?" - அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னையில் பாமக சார்பாக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். பின்னர் அவர் மேடையில் பேசியதாவது,
"பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 5 ஆண்டுகளாக அவராகவே இல்லை. ராமதாஸாக இருந்து எது கூறியிருந்தாலும் நான் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். ராமதாசுக்கு பிறகு நான் தலைவராக வேண்டும் என அப்போதே முடிவெடுத்துவிட்டேன். ராமதாஸ் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னை பாமகவின் தலைவராக இருக்குமாறு தெரிவித்தார். ராமதாஸ் சொல்லித்தான் 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்லப் போகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ், விசிக கட்சிகளுக்கு திடீர் பாசம் ஏன்? இதுவரை ராமதாஸ் குறித்து புகழ்ந்து பேசாத திருமாவளவன் தற்போது பேசுவது ஏன்? 3 பேர் தங்களது சுய லாபத்துக்காக ராமதாஸை பயன்படுத்தி கொள்கிறார்கள். வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தையாக மாறிவிட்டார்"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.