அண்ணாமலையை சந்தித்தது ஏன்? - டிடிவி தினகரன் விளக்கம்!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.டி.வி தினகரன், "உரிய மரியாதை கொடுக்கப்படும் கட்சிகளுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைக்கும். அந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணியாக அமையும். எங்களைத் தவிர்த்து விட்டு தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைத்துவிட முடியாது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் மட்டுமல்ல கூட்டணி அமைச்சரவையிலும் நிச்சயம் இடம்பெறுவார்கள். திமுக 200 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றும் என பேசுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தவறான முடிவால்தான் திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதே எண்ணத்தில் கூட்டணி கணக்கில் எதிர்க்கட்சிகள் தவறு செய்வார்கள். அதன் மூலம் 200 தொகுதிகளை கைப்பற்றலாம் என திமுக தப்பு கணக்கு போடுகிறது. இந்த முறை அது நடக்காது.
மேலும் நகராட்சி நிர்வாக துறையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ள நிலையில் முதல்வர் அது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இலவச மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம், இலவச சைக்கிள் போன்ற என்னற்ற மக்கள் நல திட்டங்களை ஜெயலலிதா வழங்கினார். அந்த திட்டத்தை தற்போதைய திமுக அரசு முடக்கிய நிலையில் தற்போது தேர்தல் வருவதால் மீண்டும் மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மா கொண்டுவந்த அம்மா உணவகம், மடிக்கணினி போன்ற மக்கள் நல திட்டங்களை திமுக முடக்கினாலும் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் தற்பொழுது அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலை சந்திப்பு குறித்து விளக்கம் அளித்த அவர் அண்ணாமலை தனது நண்பர் என்றும் அவரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாகவும் அரசியல் இல்லை என தெரிவித்துள்ளார்.