இந்தியாவிற்குள் சீனா அத்துமீறியபோது; பிரதமர் மோடி தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கிவிட்டார் - மல்லிகார்ஜுன கார்கே சாடல்!
இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்தபோது பிரதமர் மோடி தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கிவிட்டார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. அந்த வகையில், அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு சீன மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், அவற்றை தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ந்து இந்தியாவை சீண்டி வருகிறது.
அண்மையில், இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியமைத்துள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல அரசியல் கட்சிகள் கையில் எடுத்து பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்தபோது பிரதமர் மோடி தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கிவிட்டார் என்று கார்கே குற்றம் சாட்டினார்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய கார்கே, 'எனக்கு 56 அங்குல மார்பு இருக்கிறது, நான் பயப்பட மாட்டேன்' என்று மோடி கூறுகிறார். பயம் இல்லை என்றால் சீனா அத்துமீறி நுழைந்தபோது தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கிவிட்டீர்களா?... பிரதமர் மோடியை 'பொய்யர்களின் ஆண்டவர்'. பிரதமரின் கவனம் தேச நலனில் இல்லை. காந்தி குடும்பத்தை இழிவுபடுத்துவதிலேயே உள்ளது. சித்திரவதை செய்து நாட்டு மக்களை தன்னுடன் அழைத்துச் செல்ல நினைக்கிறார். எப்போதும் பொய் சொல்லிக்கொண்டே இருப்பார். மோடி பொய்களின் அதிபதி” இவ்வாறு கார்கே கடுமையாக விமரசனம் செய்தார்.