"பொள்ளாச்சி வழக்கில் முதலமைச்சருக்கு என்ன பங்கு இருக்கிறது?" - இபிஎஸ் விமர்சனம்
ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக உதகை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யார் குற்றவாளியாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரச்சாரம் செய்தேன். அதுபோலவே தற்பொழுது தீர்ப்பு வந்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் இதேபோல தீர்ப்பு விரைவில் வரும். 100 நாள் வேலைத்திட்டமும், மெட்ரோ ரயில் திட்டமும் தான் கொண்டு வந்தேன் என்று எடப்பாடி பனிசாமி பொய் பித்தலாட்டம் கூறி வருகிறார்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். இதுகுறித்து இபிஎஸ் எக்ஸ் தளத்தில பதிவிட்டுள்ளதாவது,
"இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ஊட்டி பயணத்திற்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, முதலமைருக்கோ என்ன பங்கு இருக்கிறது? இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எப்படி நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி!
இன்று முதலமைச்சர் @mkstalin,
தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (?) கொடுத்துள்ளார்.பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI; தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது?…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 14, 2025
கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு! கொடும் குற்றம் புரிந்த கேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…? தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.
அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார். நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug! ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அதிமுக.
நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு. மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்! இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
இது தானே OG பித்தலாட்டம்? மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.