"மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல..." - திருமாவளவன் விமர்சனம்
இந்து முன்னணி சார்பில் மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் கடந்த ஜுன் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகள், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் இந்த வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த திருமாவளவன் பேசியதாவது,
"மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு. முருக பக்தர்களின் மாநாடு நடந்திருந்தால் தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் பெரியார், அண்ணா போன்றவர்களை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பப்பட்டிருக்காது. அந்த மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றது அதிர்ச்சியளிக்கிறது. அண்ணாவை விமர்சித்தாலும், பெரியாரை விமர்சித்தாலும் தேர்தல் ஆதாயம் கருதி பாஜகவுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று அதிமுக இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். அண்ணா, பெரியாரை விமர்சித்த பிறகும் அவர்களோடு சேர்ந்து பயணிக்கப் போகிறார்களா? என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுகவினர் தெரிவிக்க வேண்டும்"
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.