For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன? - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

04:32 PM Jan 05, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்தது என்ன    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி
Advertisement

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி திராவிட மாடல் அரசு துணை நிற்கிறது, மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒன்றுமே கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிறைய கொடுத்துள்ளது. 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

2014 – 2023 வரை தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி. அதே நேரம் மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட கூடுதலாகவே நிதி கொடுத்துள்ளோம். தமிழகம், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மாதம் தோறும் தவறாமல் நிதி கொடுத்து வருகிறோம்.” இவ்வாறு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய வீடியோவையும் டேக் செய்துள்ளார். 

அந்த பதிவில், “பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது திராவிட மாடல் அரசு.

ஆட்சி அமைந்தது முதல், மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் அளவுக்கு செலவில் மிச்சம், காலை உணவுத் திட்டம் மூலம் பணிச்சுமைக் குறைப்பு, புதுமைப் பெண் திட்டத்தின் மூலமாக மாதம் 1000 ரூபாய், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் எனப் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசின் நிதியினைக் கொண்டு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காகச் செய்தது என்ன?”

இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags :
Advertisement